உபா 15

15
அத்தியாயம் 15
விடுதலையின் வருடம்
1“ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக. 2விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக. 3அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக. 4எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்., 5உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். 6உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை. 7“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 9விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். 10அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
வேலைக்காரர்களின் விடுதலை
12“உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக. 13அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல், 14உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. 15நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். 16ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், 17நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். 18அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
முதற்பிறந்த மிருகங்கள்
19“உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக. 20யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள். 21அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம். 22அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம். 23அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.

S'ha seleccionat:

உபா 15: IRVTam

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió