1 சாமு 23
23
அத்தியாயம் 23
தாவீது கேகிலா நகரத்தை மீட்டல்
1இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 2அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தர்களை முறியடிக்கலாமா என்று யெகோவாவிடத்தில் விசாரித்ததற்கு, யெகோவா: நீ போ; பெலிஸ்தர்களை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார். 3ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள். 4அப்பொழுது தாவீது திரும்பவும் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது, யெகோவா அவனுக்கு பதிலாக: நீ எழுந்து, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 5அப்படியே தாவீது தன் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்களுடைய ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாக கேகிலாவின் குடிகளை இரட்சித்தான். 6அகிமெலேக்கின் மகனான அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
சவுல் தாவீதை துரத்துதல்
7தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி, 8தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றுகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான். 9தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான். 10அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன். 11கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் யெகோவா: அவன் வருவான் என்றார். 12கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, யெகோவா: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். 13ஆகையால் தாவீதும் ஏறக்குறைய 600 பேராகிய அவனுடைய மனிதர்களும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். 14தாவீது வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தங்கியிருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15தன்னுடைய உயிரை வாங்கத் தேடும்படி, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியால், தாவீது சீப் வனாந்திரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி: 17நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான். 19பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா? 20இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். 21அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. 22நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது. 23அவன் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான். 24அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள். 25சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்திரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான். 26சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள். 27அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். 28அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத்#23:28 தப்புவிக்கும் கன்மலை என்று பெயரிட்டார்கள். 29தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.
S'ha seleccionat:
1 சாமு 23: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.