அப்போஸ்தலர் 22

22
1பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.
2அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள்.
அப்பொழுது பவுல் சொன்னதாவது: 3“நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன். 4இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன். 5இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.
6“நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது. 7நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.
8“ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன்.
“அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார். 9என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
10“அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன்.
“அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார். 11என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
12“பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான். 13அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
14“பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார். 15நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். 16இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
17“பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன். 18அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19“அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே. 20உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.
21“அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.
ரோமக் குடிமகனான பவுல்
22பவுல் இதைச் சொல்லும்வரை கூடியிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்பு அவர்கள் உரத்த குரலில், “பூமியிலிருந்து இவனை அடியோடு ஒழியுங்கள். இவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன்!” என்று சத்தமிட்டார்கள்.
23அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள். 24அதனால் அந்த படைத்தளபதி, பவுலை முகாமுக்குள் கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், கூடியிருந்த மக்கள் ஏன் பவுலைப் பார்த்து இப்படிச் சத்தமிட்டார்கள் என்று அறியும்படி, அவனை சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டான். 25அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தலைவனைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.
26இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.
27அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல்.
“ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.
28அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம், “நான் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியே என் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்” என்றான்.
அதற்கு பவுல், “நானோ இந்தக் குடியுரிமை உடையவனாகவே பிறந்தேன்” என்றான்.
29பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச்சென்றார்கள். தான், ஒரு ரோம குடிமகனான பவுலை சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது, அந்த படைத்தளபதியும் பயமடைந்தான்.
ஆலோசனைச் சங்கத்தின்முன் பவுல்
30மறுநாளில் படைத்தளபதி, பவுல் ஏன் யூதர்களினால் குற்றம் சாட்டப்பட்டான் என்று சரியாக அறிய விரும்பினான். அதனால் அவன் பவுலை சங்கிலிகளிலிருந்து விடுவித்து, தலைமை ஆசாரியர்களையும், ஆலோசனைச் சங்கத்திலுள்ள அனைவரையும் ஒன்றுகூடும்படி உத்தரவிட்டான். பின்பு அவன் பவுலைக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.

Highlight

Salin

Bandingkan

Kongsi

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk