யாத் 13

13
அத்தியாயம் 13
முதற்பிறப்புகளைப் பிரதஷ்டை செய்தல்
1யெகோவா மோசேயை நோக்கி: 2“இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.
3அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். 4ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். 5ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. 6புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். 7அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். 8அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். 9யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 10ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
முதல் மகனின் பிரமாணம்
11மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது, 12கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள். 13கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக;#13:13 13:13 கழுதை பலி அங்கீகரிக்கப்படாது மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள். 14பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 15எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 16யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.
மேகத்தூணிலும், அக்கினித்தூணிலும்
17பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், 18செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள். 19மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான். 20அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள். 21அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார். 22பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

Zur Zeit ausgewählt:

யாத் 13: IRVTam

Markierung

Teilen

Vergleichen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.