யாத் 12
12
அத்தியாயம் 12
முதல் பஸ்கா பண்டிகை
1யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: 2“இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக. 3நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும். 4ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். 5அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். 6அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, 7அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 8அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும். 9பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள். 10அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள். 11அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா.#12:11 யெகோவாவுடைய பஸ்கா 12அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்#12:12 எகிப்தின்; நானே யெகோவா. 13நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும். 14அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும். 15புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான். 16முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம். 17புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும். 18முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக. 19ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான். 20புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல்” என்றார்.
பஸ்கா பண்டிகை கொண்டாடுதல்
21அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, 22ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 23யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். 24இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். 25யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். 26அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், 27இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். 28இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
29நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார். 30அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.
கானானுக்கான பயணம்: ராமசேசைவிட்டுக் சுக்கோத்திற்குப் போனார்கள்
31இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள். 32நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். 33எகிப்தியர்கள்: “நாங்கள் எல்லோரும் சாகிறோமே” என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள். 34பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள். 35மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள். 36யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தவிதமாக அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டார்கள்.
37இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள். 38அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது. 39எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை. 40இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள். 41நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. 42யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் யெகோவாவுக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.
பஸ்கா அனுசரிப்பதற்கான கட்டளைகள்
43மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம். 44பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம். 45அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம். 46அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. 47இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும். 48அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம். 49சொந்த தேசத்தில் பிறந்தவனுக்கும் உங்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கட்டும்” என்றார். 50இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 51அன்றைக்கே யெகோவா இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
Zur Zeit ausgewählt:
யாத் 12: IRVTam
Markierung
Teilen
Vergleichen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.