லூக் 3
3
அத்தியாயம் 3
யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
1திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும், 2அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. 3அப்பொழுது:
“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்,
எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்,
கோணலானவைகள் நேராகும்,
கரடானவைகள் சமமாகும் என்றும்,
5மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும்,
வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்”
என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
6அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். 7அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான். 10அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான். 12வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். 13அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான். 15யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது, 16யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். 18வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். 19தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, 20ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
இயேசுவின் ஞானஸ்நானமும் வம்சவரலாறும்
21மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது; 22பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது. 23அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; 24ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்; 25யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன். 26நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். 27யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். 28நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன். 29யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன். 30லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன். 31எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். 32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன். 33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன். 34யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன். 35நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன். 36சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். 37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன். 38ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
S'ha seleccionat:
லூக் 3: IRVTam
Subratllat
Comparteix
Compara
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.