எசேக் 47

47
அத்தியாயம் 47
ஆலயத்திலிருந்து புறப்படும் நதி
1பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. 2அவர் என்னை வடக்கு வாசல் வழியாகப் புறப்படச்செய்து, என்னை வெளியிலே கிழக்கு திசைக்கு எதிரான வெளிவாசல்வரை சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபக்கத்திலிருந்து பாய்கிறதாக இருந்தது. 3அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது. 4பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாக இருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாக இருந்தது. 5பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாக இருந்தது; தண்ணீர் நீச்சல் ஆழமும் கடக்கமுடியாத நதியுமாக இருந்தது. 6அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார். 7நான் நடந்துவரும்போது, இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான மரங்கள் இருந்தது. 8அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், வனாந்திரவழியாக ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். 9நடந்தது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் வாழும் உயிரினங்கள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடம் எங்குமுள்ள யாவும் ஆரோக்கியமடைந்து பிழைக்கும். 10அப்பொழுது என்கேதி துவங்கி எனெக்லாயிம்வரை மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற இடமாக இருக்கும்; அதின் மீன்கள் மத்திய தரைக் கடலின் மீன்களைப்போலப் பல வகையான மீன்கள் ஏராளமுமாக இருக்கும். 11ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய சதுப்பு பகுதிகளும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும். 12நதியோரமாக அதின் இக்கரையிலும் அக்கரையிலும் சாப்பிடுவதற்கான எல்லாவித மரங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் பழங்கள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுபழங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் பழங்கள் சாப்பிடுவதற்கும், அவைகளின் இலைகள் உதிர்ந்து போகாது.
தேசத்தின் எல்லைகள்
13யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு. 14சகோதரனுடன் சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்; அதை உங்களுடைய தகப்பன்மார்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்துக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும். 15தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் மத்திய தரைக் சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற, 16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையுடன் சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. 17அப்படியே மத்திய தரைக் கடலிலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடக்கு மூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடக்கு பக்கம். 18கிழக்கு பக்கத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்திற்கும், நடுவாகவும் கிழக்கு கடல்வரை இருக்கும் எல்லையாக அளப்பீர்களாக; இது கிழக்கு பக்கம். 19தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை மத்திய தரைக் கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம். 20மேற்கு பக்கம் அந்த எல்லை துவங்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேரும்வரை இருக்கிற மத்திய தரைக் கடலே; இது மேற்கு பக்கம். 21இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக. 22உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சொந்தமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் மக்களில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களுடன் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சொத்திற்கு உடன்படுவார்களாக. 23அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió