1 கொரி 4
4
அத்தியாயம் 4
ஊழியக்காரர்களும் மேற்பார்வைத்துவமும்
1இப்படியாக, எந்த மனிதனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்றும், தேவனுடைய இரகசியங்களின் மேற்பார்வைக்காரர்களென்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். 2மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவசியமாகும். 3ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 4என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 5ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 6சகோதரர்களே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்கவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாக கர்வமடையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன். 7அன்றியும் உன்னை சிறப்பானவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது எது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? 8இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாக இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாக இருக்கும்; அப்பொழுது உங்களோடுகூட நாங்களும் ஆளுவோமே. 9தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம். 10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். 11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். 12எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். 13நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம். 14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 15கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன். 16ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 17இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். 18நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். 19ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். 20தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது. 21உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடம் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
S'ha seleccionat:
1 கொரி 4: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.