யாத் 9
9
அத்தியாயம் 9
5 வது-ஆடு மாடுகளின் மீதான வாதை
1பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. 2நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், 3யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். 4யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். 5மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். 6மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. 7பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.
6 வது-கொடியகொப்புளங்களின் வாதை
8அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். 9அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார். 10அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது. 11அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது. 12ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.
7 வது-கல்மழையின் வாதை
13அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. 14விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன். 15நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். 16என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன். 17நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா? 18எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன். 19இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார். 20பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான். 21எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
22அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். 23அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்; 24கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. 25எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. 26இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது. 27அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள். 28இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை” என்றான். 29மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர். 30இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான். 31அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது. 32கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. 33மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது. 34மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். 35யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.
Zur Zeit ausgewählt:
யாத் 9: IRVTam
Markierung
Teilen
Vergleichen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.