யோவான் 16
16
1“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கின்றேன். 2அவர்கள் உங்களை யூத மன்றாடும் ஆலயங்களிலிருந்து வெளியேற்றி விலக்கிவிடுவார்கள்; உண்மையாகவே, உங்களைக் கொலை செய்கின்றவன், இறைவனுக்குப் பணி செய்வதாக எண்ணுகின்ற ஒரு காலம் வருகின்றது. 3பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் காரணமாக இத்தகைய காரியங்களைச் செய்வார்கள். 4ஆனாலும், அந்தக் காலம் வருகின்றபோது, நான் அதைக் குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவிற்கொள்வதற்கே இதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். நான் உங்களுடனேகூட இருந்ததனாலேயே, இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை. 5இப்போது நான் என்னை அனுப்பியவரிடத்திற்குப் போகின்றேன். ஆயினும், ‘நீர் எங்கே போகின்றீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடம் கேட்கவில்லை. 6நான் இவைகளைச் சொன்னதனால் உள்ளத்தில் நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றீர்கள். 7ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன்: உங்கள் நன்மைக்காகவே நான் உங்களைவிட்டுப் போகின்றேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உறுதுணையாளர் உங்களிடத்தில் வர மாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். 8அவர் வரும்போது பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணர்த்துவார்: 9அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதனால் பாவத்தைக் குறித்தும், 10இனிமேல் நீங்கள் என்னைக் காணாதவாறு பிதாவின் இடத்துக்கு நான் போகின்றபடியால் நீதியைக் குறித்தும், 11இந்த உலகத்தின் அதிபதி இப்போது நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
12“நான் உங்களுக்குச் சொல்வதற்கு இன்னும் அதிகம் உண்டு. அவற்றை எல்லாம் இப்போது உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. 13ஆயினும் சத்தியத்தை வெளிப்படுத்தும் ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை அனைத்து சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேச மாட்டார்; தாம் கேட்கின்றதை மாத்திரம் பேசி, வரப்போகும் காரியங்களை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். 14அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு அறிவிப்பார். இதனால் அவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். 15பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனால் அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.
சீடர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறுதல்
16“இன்னும் கொஞ்சக் காலத்தில், நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைக் காண்பீர்கள்.”
17அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக் காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவிடம் போகின்றேன்’ என்றும் சொல்கின்றாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 18“இவர் கொஞ்சக் காலம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லை” என்றும் பேசிக்கொண்டார்கள்.
19இதைக் குறித்து அவர்கள் தம்மிடம் கேட்க விரும்புகின்றார்கள் என்று இயேசு அறிந்து கொண்டார். எனவே அவர் அவர்களிடம், “ ‘கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்கின்றீர்களா? 20நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மனமகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். 21பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால் வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் அவள் தன் வேதனையை மறந்து, ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டுவந்ததைக் குறித்து மனமகிழ்ச்சி அடைகின்றாள். 22அவ்விதமாகவே நீங்களும் இப்போது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆயினும் நான் உங்களைத் திரும்பவும் காண்பேன். அப்போது உங்கள் உள்ளம் மனமகிழ்ச்சி அடையும். ஒருவனும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான். 23அந்தநாளிலே நீங்கள் என்னிடம் எதையும் கேட்க வேண்டியதில்லை. நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீங்கள் என் பெயரில் என் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். 24இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மனமகிழ்ச்சியும் முழுநிறைவு பெறும்.
25“இவைகளை எல்லாம் உவமைகள் மூலமாக உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகின்றது. அப்போது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசாமல், என் பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன். 26அந்தநாளில் நீங்களே என்னுடைய பெயரில் பிதாவிடம் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவிடம் கேட்க வேண்டியதில்லை. 27நீங்கள் என்னில் அன்பாயிருந்ததனாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசித்ததனாலும், பிதா உங்களில் அன்பாயிருக்கின்றார். 28நான் பிதாவிடமிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தைவிட்டு, பிதாவிடம் திரும்பிப் போகின்றேன்” என்றார்.
29அப்போது இயேசுவின் சீடர்கள், “இப்போது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகின்றீர். 30நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றீர். அதனால் எவனும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்” என்றார்கள்.
31அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? 32ஆனால் ஒரு காலம் வருகின்றது, அது இப்போதே வந்துவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவனும் அவனவன் வீட்டுக்கு ஓடிப் போவான். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கின்றார்.
33“நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படி, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்கு துன்பங்கள் உள்ளன, ஆயினும் தைரியமாயிருங்கள். நான் உலகத்தை வெற்றி கொண்டேன்” என்றார்.
Currently Selected:
யோவான் 16: TRV
Highlight
Share
ਕਾਪੀ।
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.