Akara Njirimara YouVersion
Akara Eji Eme Ọchịchọ

லேவி 21

21
அத்தியாயம் 21
ஆசாரியர்களுக்கான நடைமுறைகள்
1பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல். 2தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும், தன் மகளும், தன் சகோதரனும், 3ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம். 4தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.#21:4 திருமணங்களால் தீட்டுப்படக்கூடாது. 5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக#21:5 19:27-28 பார்க்க. 6தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் யெகோவாவின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும். 7அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது. 8அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக. 9ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள். 10“தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும், 11சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும், 12பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா. 13கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும். 14விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன். 15அவன் தன் வித்தைத் தன் மக்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல் என்றார். 16பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 17“நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது. 18ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும், 19கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும், 20கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது. 21ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது. 22அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம். 23ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார். 24மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.

Nke Ahọpụtara Ugbu A:

லேவி 21: IRVTam

Mee ka ọ bụrụ isi

Kesaa

Lee anya n'etiti ihe abụọ

Mapịa

None

Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye