Akara Njirimara YouVersion
Akara Eji Eme Ọchịchọ

ஆதி 45

45
அத்தியாயம் 45
யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல்
1அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. 2அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். 3யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள். 4அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். 5என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். 6தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். 7பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். 8ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார். 9நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். 10நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம். 11உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். 12இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. 13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி; 14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். 15பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
16யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். 17பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய், 18உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். 19நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். 20உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான். 21இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும், 22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும்#45:22 3,500. ரூபாய்கள் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான். 23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். 24மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். 25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து: 26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. 27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. 28அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

Nke Ahọpụtara Ugbu A:

ஆதி 45: IRVTam

Mee ka ọ bụrụ isi

Kesaa

Lee anya n'etiti ihe abụọ

Mapịa

None

Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye