யாத் 7
7
அத்தியாயம் 7
ஆரோனுடைய கோல் பாம்பாக மாறுதல்
1யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். 2நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும். 3நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன். 4பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன். 5நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார். 6மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 7அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது.
ஆரோனுடைய கோல் பாம்பாக மாறியது.
8யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 9“உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். 10மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. 11அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது. 13யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
1 வது வாதை-இரத்தமாகிய வாதை
14அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான். 15காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, 16அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர். 17இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி, 18நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். 19மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார். 20யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. 21நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. 22எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். 23பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். 24நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள். 25யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
Nke Ahọpụtara Ugbu A:
யாத் 7: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.