உபா 4
4
அத்தியாயம் 4
கீழ்ப்படிவதற்கான கட்டளை
1“இஸ்ரவேலர்களே, நீங்கள் பிழைத்திருப்பதற்கும், உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நுழைந்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், நீங்கள் கைக்கொள்வதற்காக நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். 2நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். 3பாகால்பேயோரின் நிமித்தம் யெகோவா செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார். 4ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். 5நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி நுழையும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். 6ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; மக்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாக இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய மக்கள் கூட்டமே ஞானமும் விவேகமும் உள்ள மக்கள் என்பார்கள். 7நம்முடைய தேவனாகிய யெகோவாவை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாகப் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்கள் கூட்டம் எது? 8இந்நாளில் நான் உங்களுக்கு கொடுக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுவதற்கும் இணையாக இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய மக்களும் எது? 9ஓரேபிலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ நிற்கும்போது, யெகோவா என்னை நோக்கி: “மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில், 10உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக. 11நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. 12அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை. 13நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். 14நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.
சிலைவழிபாடு தடைசெய்யப்படுதல்
15“யெகோவா ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடன் பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை. 16ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவமும், பெண் உருவமும், 17பூமியிலிருக்கிற எந்தவொரு மிருகத்தின் உருவமும், ஆகாயத்தில் பறக்கிற இறக்கையுள்ள எந்தவொரு உருவமும், 18பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல், 19உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய யெகோவா வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா மக்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுதுவணங்க சம்மதிக்காமல், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 20இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சொந்தமான மக்களாயிருக்க, யெகோவா உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இரும்பை உருக்கும் உலையிலிருந்து புறப்படச்செய்தார். 21யெகோவா உங்களால் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் நுழைவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார். 22அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 23உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை நீங்கள் மறந்து, உங்கள் தேவனாகிய யெகோவா, வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான சிலையையும் உங்களுக்கு உண்டாக்காமல் எச்சரிக்கையாயிருங்கள். 24உன் தேவனாகிய யெகோவா சுட்டெரிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். 25“நீங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் பெற்று, தேசத்தில் அதிக நாட்கள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, எந்தவொரு சிலையையாவது எந்தவொரு சாயலான உருவத்தையாவது செய்து, உன் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், 26நீங்கள் யோர்தானைக்கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இல்லாமல், சீக்கிரமாக முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன்; நீங்கள் அதிலே அதிக நாட்கள் இராமல் அழிக்கப்படுவீர்கள். 27யெகோவா உங்களை யூதரல்லாத மக்களுக்குள்ளே சிதறடிப்பார்; யெகோவா உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற மக்களிடத்திலே கொஞ்ச மக்களாக மீந்திருப்பீர்கள். 28அங்கே காணாமலும், கேளாமலும், சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனிதர்களுடைய கைவேலையாகிய தெய்வங்களை வணங்குவீர்கள். 29அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய யெகோவாவை தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். 30நீ துன்பப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால், 31உன் தேவனாகிய யெகோவா இரக்கமுள்ள தேவனாயிருப்பதினால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் முற்பிதாக்களுக்குத் தாம் வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
யெகோவாவே தேவன்
32“தேவன் மனிதனைப் பூமியிலே படைத்த நாள்முதல், உனக்கு முன் இருந்த ஆதிநாட்களில், வானத்தின் ஒருமுனை துவங்கி அதின் மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ; 33அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டது போல, எந்தவொரு மக்களாவது கேட்டதும், உயிரோடிருந்ததும் உண்டு?, 34அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார். 35யெகோவாவே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள, இது உனக்குக் காட்டப்பட்டது. 36உனக்கு உபதேசிக்கும்படி, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கச்செய்து, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். 37அவர் உன் முற்பிதாக்களிடத்தில் அன்பு செலுத்தியதால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, 38உன்னிலும் பலத்த பெரிய மக்களை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச்சொந்தமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்திற்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 39ஆகையால், உயர வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாவே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, 40நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கவும், உன் தேவனாகிய யெகோவா உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீண்ட நாட்கள் வாழ்வதற்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய்” என்றான்.
அடைக்கலப் பட்டணங்கள்
41முன்பகை இல்லாமல் கை தவறுதலாக மற்றவனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பி ஓடிப்போய்ப் பிழைத்திருப்பதற்கு, 42ரூபனியர்களைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்திரத்திலுள்ள பேசேரும், காத்தியர்களைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயர்களைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய, 43மூன்று பட்டணங்களை மோசே யோர்தான் நதிக்கு கிழக்கில், சூரியன் உதிக்கும் திசையிலே ஏற்படுத்தினான்.
நியாயப்பிரமாணத்தின் அறிமுகம்
44இதுவே மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பிரமாணம். 45இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 46மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவைத் தோற்கடித்து, 47யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் துவங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்கும் உள்ள தேசமும், 48யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமவெளியைச்சேர்ந்த கடல் வரையுள்ள சமவெளி அனைத்துமாகிய, 49எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
Nke Ahọpụtara Ugbu A:
உபா 4: IRVTam
Mee ka ọ bụrụ isi
Mapịa
Lee anya n'etiti ihe abụọ
Kesaa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.