உபா 3
3
அத்தியாயம் 3
ஓக் ராஜாவாவின் தோல்வி
1“பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான். 2அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும் அவனுடைய தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார். 3அப்படியே நம்முடைய தேவனாகிய யெகோவா பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம். 4அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்ஜியமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம். 5அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது; மட்டுமின்றி அவைகளில் மதில் இல்லாத பட்டணங்களும் அநேகம் இருந்தன. 6அவைகளையும் முற்றிலும் அழித்தோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம். 7ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம். 8இப்படியே யோர்தானுக்கு கிழக்கிலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம். 9சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள். 10சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம். 11மீதியாயிருந்த இராட்சதர்களில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில், மனிதர்களுடைய கை முழத்தின்படியே, 13 அடி நீளமும் 6 அடி அகலமுமாயிருந்தது; அது அம்மோன் சந்ததியாருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
தேசம் பிரிக்கப்படுதல்
12“அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர்#3:12 ஆரோவேர் பட்டணத்தின் வடக்கு பகுதியிலிருந்து. துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன். 13கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன். 14மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கெசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர்#3:14 யாவிரின் கிராமங்கள். என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது. 15மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன். 16மேலும் கீலேயாத் துவங்கி, அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், அம்மோனியர்களுடைய கடைசி எல்லையாகிய யாப்போக்கு ஆறுவரை இருக்கிற தேசத்தையும், 17கின்னரேத் துவங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாகக் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமவெளியின் கடல்வரை, யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமவெளியையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன். 18“அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு இந்த தேசத்தைச் சொந்தமாகக் கொடுத்தார்; போர்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லோரும் இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தியவர்களாக நடந்துபோங்கள். 19உங்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் உங்களுடைய ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன். 20ஆனாலும் யெகோவா உங்களை இளைப்பாறச்செய்ததுபோல, உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்வரை நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்களுடைய இடத்திற்குத் திரும்புவீர்களாக என்றேன்.
யோர்தானைக் கடந்துசெல்ல மோசேக்கு தடை
21அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய யெகோவா அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன்னுடைய கண்கள் கண்டது; நீ போய்ச்சேரும் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் யெகோவா அப்படியே செய்வார். 22அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார் என்று சொன்னேன். 23அக்காலத்திலே நான் யெகோவாவை நோக்கி: 24“யெகோவாவாகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் துவங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய செயல்களுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? 25நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன். 26யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம். 27நீ பிஸ்கா மலையுச்சியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தான் நதியை நீ கடந்துபோவதில்லை. 28நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த மக்களுக்கு முன்பாகக் கடந்துபோய், நீ காணும் தேசத்தை அவனே அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார். 29பின்பு பெத்பேயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
Nke Ahọpụtara Ugbu A:
உபா 3: IRVTam
Mee ka ọ bụrụ isi
Mapịa
Lee anya n'etiti ihe abụọ
Kesaa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.