ஓசியா 1

1
1உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் யூதாவின் அரசர்களாக அவரவர் ஆட்சி செய்த காலங்களிலும், இஸ்ரயேலில் யோவாஸின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சி செய்துவந்த காலத்திலும், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது.
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
2ஓசியாவின் மூலமாகக் கர்த்தர் பேசத் தொடங்கியபோது கர்த்தர் அவனிடம், “நீ போய் ஒரு விலைமாதுவை மனைவியாக்கிக் கொள், அவள் தனது தகாத உறவால் முறைகேடான பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். ஏனெனில் நாடு#1:2 நாடு இஸ்ரயேல் கர்த்தருக்கு விரோதமாக, மிகக் கேவலமான ஒழுக்கக்கேடான குற்றத்தைச் செய்திருக்கிறது” என்றார். 3அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கருவுற்று, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
4அப்போது, கர்த்தர் ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகுவிரைவாக யெஸ்ரயேல் நகரத்தில் நடந்த படுகொலைக்காக, யேகூவின் குடும்பத்தைத் தண்டித்து, இஸ்ரயேல் இராச்சியத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். 5அந்தநாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் இராணுவ பலத்தை#1:5 இராணுவ பலத்தை அல்லது வில்லை உடைப்பேன்” என்றார்.
6மீண்டும் அவள் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். அப்போது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோ-ருகாமா#1:6 லோ-ருகாமா – இதன் அர்த்தம் அன்புகாட்டப்படாதவள் எனப் பெயரிடு. ஏனெனில் நான் மீண்டும் ஒருபோதும் இஸ்ரயேல் மக்களை மன்னிக்கும்படியாக அவர்களுக்கு அன்பு காட்ட மாட்டேன். 7ஆனால் யூதா மக்களுக்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும் வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன்” என்றார்.
8லோ-ருகாமா பால் குடிப்பதை மறந்த பின்னர், கோமார் இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 9அப்போது கர்த்தர், “அவனுக்கு, லோ-அம்மீ#1:9 லோ-அம்மீ – இதன் அர்த்தம் எனது மக்கள் அல்ல. என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்கள் அல்ல, நான் உங்கள் இறைவனும் அல்ல.
10“ஆயினும் ஒருநாள் வரும்; அப்போது இஸ்ரயேலர்கள் அளவிடவோ, எண்ணிக் கணக்கிடவோ முடியாத கடற்கரை மணலைப் போலிருப்பார்கள். ‘நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘வாழும் இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். 11யூதாவின் மக்களும், இஸ்ரயேல் மக்களும் திரும்பவும் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரே தலைவனை நியமிப்பார்கள். அவர்கள் நாட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வருவார்கள். ஏனெனில் யெஸ்ரயேலின் நாள் மேன்மையுள்ளதாய் இருக்கும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா 1: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்