39
மதகுருக்களின் ஆடைகள்
1பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்காக நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல்களினால் நெய்யப்பட்ட ஆடைகளான பரிசுத்த ஆடைகளைத் தயாரித்தார்கள்.#39:1 பெசலெயேலும், அகோலியாவும், கைவினைஞரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோனுக்கு பரிசுத்த ஆடைகளையும் தயாரித்தார்கள்.
ஏபோத்
2ஏபோத்தைத் தங்கத்தினாலும் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு ஆகிய நூல்களினாலும் திரித்த மென்பட்டுத் துணியினாலும் செய்தான். 3தங்கத்தை மெல்லிய தகடுகளாக அடித்து, அதைச் சரிகை நூலாக வெட்டி, நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல் மென்பட்டுத் துணிகளுடன் இழையோடி கைவினையுள்ள சித்திரத் தையல் வேலையாகச் செய்தார்கள். 4ஏபோத்தின் இரு மூலைகளிலும் தொடுக்கப்படுவதற்கு, கொழுவக்கூடிய ஏபோத்தின் தோள்பட்டிகளைச் செய்தார்கள். 5அதன் திறமையாக நெய்யப்பட்ட இடைப்பட்டியும் அதைப் போலவே செய்யப்பட்டு, அதுவும் ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு இணைக்கப்பட்டு கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
6கோமேதகக் கற்களைத் தங்கச் சரிகை வேலைப்பாடுகளில் பதித்து, அவற்றின்மீது இஸ்ரயேலின் பன்னிரண்டு மகன்மாரின் பெயர்களை ஒரு முத்திரையைப் போல் பொறித்தான். 7பின்பு அவற்றை இஸ்ரயேலின் பன்னிரண்டு மகன்மார்களுக்கான நினைவுச் சின்னக் கற்களாக ஏபோத்தின் தோள்பட்டியில் இணைத்தான். இவை கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மார்பணி
8அவன் கைவினைஞரின் வேலையாக மார்பணியை அமைத்தான். ஏபோத்தைப் போலவே அதைத் தங்கம், நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டுத் துணி ஆகியவற்றைக்கொண்டு செய்தான். 9மார்பணி ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும்#39:9 ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும் – சுமார் 9 அங்குலம் அல்லது 23 சென்ரிமீற்றர் உடைய இரண்டாக மடிக்கப்பட்ட சதுரத் துண்டாயிருந்தது. 10அதில் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதித்தார்கள். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; 11இரண்டாம் வரிசையில் மரகதம்; நீல மாணிக்கம், வைரம்; 12மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி; 13நான்காம் வரிசையில் புஷ்பராகம், கோமேதகம், யஸ்பி ஆகியவற்றை தங்கச் சரிகை வேலைப்பாடாகப் பதித்தார்கள். 14இஸ்ரயேலின் பன்னிரண்டு மகன்மாரின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்கள் என்ற கணக்கின்படி பன்னிரு கற்கள் இருந்தன. பன்னிரு கோத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப் போல் பொறிக்கப்பட்டிருந்தன.
15மார்பணிக்கு சுத்தத் தங்கத்தாலான கயிற்றைப் போன்ற பின்னப்பட்ட சங்கிலிகளைச் செய்தார்கள். 16அவர்கள் இரண்டு தங்கச் சரிகை நூல் வேலைப்பாடுகளையும், இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களையும் மார்பணியின் இரண்டு மூலைகளிலும் பொருத்தினார்கள். 17மார்பணியின் இரண்டு முனைகளிலும் உள்ள வளையங்களில் தங்கச் சங்கிலிகளைத் தொடுத்தார்கள். 18சங்கிலிகளின் மற்றைய நுனிகளைச் சரிகை நூல் வேலைப்பாடுகளுடன் தொடுத்து, அவற்றைத் தோள்பட்டிகளுடன் ஏபோத்தின் முன் பக்கத்தில் இணைத்தார்கள். 19அவர்கள் தங்கத்தால் இன்னும் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்தை ஒட்டியுள்ள மார்பணியின், கீழ் விளிம்பின் இரு மூலைகளில் உட்பக்கத்தில் வைத்தார்கள். 20அவர்கள் ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்புறத்தில் இருக்கின்ற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தை தொடுக்கும்படி, வேறு இரு தங்க வளையங்களைப் பொருத்தினார்கள். 21மார்பணியை திறமையாக நெய்யப்பட்ட இடைப்பட்டியுடன் இணைக்கும்படியாகவும், அது ஏபோத்திலிருந்து விலகாமல் இருக்கும்படியாகவும், ஏபோத்தின் வளையங்களுடன் மார்பணியின் வளையங்களை நீல நாடாவால் கட்டினார்கள். இவற்றை கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
மற்றைய குருத்துவ ஆடைகள்
22அவன் ஏபோத்தின் அங்கி முழுவதையும் நீல நிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தான். 23அந்த அங்கியின் நடுவில் கழுத்துப் பட்டியின் திறப்பைப் போன்ற ஒரு திறப்பை அமைத்து, கழுத்துத் துவாரம் கிழியாதபடி சுற்றிலும் ஒரு பட்டியை வைத்துத் தைத்தான். 24அந்த அங்கியின் கீழ் ஓரத்தைச் சுற்றிலும் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டுத் துணியினாலும் மாதுளம் பழங்களைச் செய்து அலங்கரித்தார்கள். 25அங்கியின் ஓரங்களைச் சுற்றிலும் மென்பட்டுத் துணியிலான மாதுளம் பழங்களின் இடையே இருக்கத்தக்கதாக சுத்தத் தங்கத்தினால் மணிகளைச் செய்து தொங்க விட்டார்கள். 26கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, குருத்துவப் பணியைச் செய்வதற்கென ஆரோன் அணிந்திருக்கும் அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும் ஒரு மாதுளம் பழமும், ஒரு மணியுமாக மாறிமாறி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
27ஆரோனுக்கும், அவனுடைய மகன்மார்களுக்கும் மென்பட்டினால் ஒரு நெசவாளியின் வேலையாக உள் அங்கிகளைத் தயாரித்தார்கள். 28மென்பட்டினால் தலைப்பாகையையும், அதன் பட்டியையும், திரித்த மென்பட்டுத் துணியினால் உள்ளாடைகளையும் தயாரித்தார்கள். 29திரித்த மென்பட்டுத் துணி, நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் பூத் தையல் வேலையாக இடைப்பட்டிகளையும் செய்தார்கள். இவை கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
30மேலும் அவர்கள் சுத்தத் தங்கத்தினால் ஒரு பட்டியைச் செய்து,
“கர்த்தருக்குப் பரிசுத்தம்#39:30 கர்த்தருக்குப் பரிசுத்தம் – கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது”
என ஒரு முத்திரையைப் போல அதில் பொறித்தார்கள். 31அதில் ஒரு நீல நிற நாடாவைக் கட்டி தலைப்பாகையோடு இருக்கும்படி அதை இணைத்தார்கள். இவை கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மோசே இறைபிரசன்னக் கூடாரத்தை மேற்பார்வையிடல்
32இறைபிரசன்னக் கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தின் வேலைகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். 33அதன் பின்னர் இறைபிரசன்னக் கூடாரத்தை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்:
கூடாரமும், அதன் எல்லாத் தளபாடங்களும், கொழுக்கிகள், மரச்சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், அடித்தளங்கள்,
34அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோல், மூடுதிரை, கடற்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,
35சாட்சிப் பெட்டியுடன் அதன் தடிகள், அதன் கிருபாசனம்,
36மேசையுடன் அதற்குரிய அனைத்து பொருட்கள், இறைபிரசன்ன அப்பம்,
37சுத்தத் தங்கத்தாலான குத்துவிளக்கு, அதில் வரிசையாக உள்ள அகல்விளக்குகள், அதன் உபகரணங்கள், வெளிச்சத்துக்கான எண்ணெய்,
38தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,
39வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் தடிகள், அதன் எல்லாப் பாத்திரங்கள்,
தொட்டி, அதன் கால்கள்,
40முற்றத்தின் திரைகள், அதன் தூண்கள், அதன் அடித்தளங்கள், முற்றத்தின் வாயில் திரை,
அதன் கயிறுகள், முற்றத்திலுள்ள கூடார ஆப்புகள்,
கூடாரமான இறைபிரசன்னக் கூடாரத்தின் அனைத்து பொருட்கள் உட்பட,
41மதகுரு ஆரோனுக்கான பரிசுத்த ஆடைகளும், அவன் மகன்மார் குருத்துவப் பணி செய்யும்போது அணியும் ஆடைகளுமான நெய்யப்பட்ட ஆடைகளையும் கொண்டுவந்தார்கள்.
42கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் அனைத்து வேலைகளையும் செய்திருந்தார்கள். 43மோசே அவர்கள் செய்த வேலைகளையெல்லாம் பார்வையிட்டார். அப்போது கர்த்தர் கட்டளையிட்டபடியே அவற்றைச் செய்திருக்கிறார்கள் என்று மோசே கண்டார். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தார்.