3
மோசேயும் எரிகின்ற புதரும்
1ஒருநாள் மோசே மீதியான் நாட்டு மதகுருவான தன் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் மந்தையை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தின் வெகுதொலைவிலுள்ள, ஓரேப்#3:1 ஓரேப் – சீனாய் மலைக்கு மற்றொரு பெயர். என்னும் இறைவனின் மலையடிவாரத்துக்கு வந்தார். 2அப்போது அங்கே புதரிலிருந்து வெளிவந்த ஒரு நெருப்புச் சுவாலையிலிருந்து, கர்த்தருடைய தூதனானவர் அவருக்குக் காட்சியளித்தார். அந்த முட்புதரில் தீப்பற்றியிருந்தும் அது எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டார். 3எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப் பார்ப்பேன்” என்றார்.
4அவர் அதைப் பார்ப்பதற்காக திரும்பியதைக் கர்த்தர் கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவரைக் கூப்பிட்டார்.
அதற்கு மோசே, “இதோ நான் இருக்கின்றேன்” என்றார்.
5இறைவன் அவரிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உனது காலணிகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கின்றது” என்றார். 6மேலும் அவர், “நான் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமாகிய உன் முற்பிதாக்களின் இறைவனாயிருக்கிறேன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததனால், தன் முகத்தை மறைத்துக்கொண்டார்.
7அப்போது கர்த்தர், “எகிப்தில் என் மக்களின் துயரத்தை நான் உண்மையாகக் கண்டு, அவர்களுடைய அடிமைகளை நடத்தும் அதிகாரிகளின் காரணமாக அம்மக்கள் எழுப்பும் அழுகுரலைக் கேட்டேன். அவர்கள் துன்பப்படுவதைக் குறித்து நான் கரிசனையாயிருக்கிறேன். 8அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றி, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் குடியிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடுகின்ற#3:8 பாலும் தேனும் வழிந்தோடுகின்ற – செழிப்பான நாடு, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க இறங்கி வந்தேன். 9இப்போதும் இஸ்ரயேலரின் அழுகுரல் என்னை எட்டியிருக்கிறது; எகிப்தியரின் அடக்குமுறையைக் கண்டிருக்கிறேன். 10ஆகையால் நீ இப்பொழுதே போ, என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் உன்னைப் பார்வோனிடம்#3:10 பார்வோனிடம் அல்லது எகிப்திய அரசனிடம் அனுப்புகின்றேன்” என்றார்.
11ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றார்.
12அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள், நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்” என்றார்.
13அப்போது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் தந்தையரின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கின்றார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அதற்கு நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றார்.
14அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர். நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”
15மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் தந்தையரின் இறைவனாகிய கர்த்தர், என்னை உங்களிடம் அனுப்பியிருக்கின்றார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்.
“இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கின்றது,
இந்தப் பெயரால்
நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும்.
16“நீ எகிப்துக்குப் போய், இஸ்ரயேலின் மூப்பர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் தந்தையரின் இறைவனாகிய கர்த்தர் எனக்குக் காட்சியளித்து சொன்னதாவது: நான் உங்கள்மேல் கரிசனையாய் இருந்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன். 17உங்களை எகிப்திலுள்ள துயரத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பி வழியும் செழிப்புள்ள நாட்டுக்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கின்றேன்’ என்று சொல்.
18“இஸ்ரயேலருடைய மூப்பர்கள் நீ சொல்வதைக் கேட்பார்கள். அதன் பின்னர் நீயும் அந்த மூப்பர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரேயரின் இறைவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார். நாங்கள் எங்கள் இறைவனாகிய கர்த்தருக்குப் பலிகளை செலுத்துவதற்கு மூன்று நாட்கள் பிரயாணம் செய்து, பாலைவனத்துக்குப் போக எங்களுக்கு அனுமதி தந்தருள்வீராக’ என்று சொல்லுங்கள். 19ஆனால், ஒரு வல்லமையான கரம் எகிப்தின் அரசனைப் பலவந்தப்படுத்தினாலன்றி, அவன் உங்களைப் போகவிட மாட்டான் என்று எனக்குத் தெரியும்.#3:19 யாத். 5:2 20ஆதலால் நான் என் கரத்தை நீட்டி, எகிப்தியர் மத்தியில் செய்யப்போகும் எல்லாவிதமான அதிசயச் செயல்களினாலும் அவர்களை வாதிப்பேன். அதன் பின்னர் அவன் உங்களைப் போகவிடுவான்.
21“அத்துடன் நான் இந்த இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரிடம் தயவு கிடைக்கும்படி செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது, வெறுங்கையுடன் போக மாட்டீர்கள். 22ஒவ்வொரு பெண்ணும் தன் அயல் வீட்டாரிடமும், தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க நகைகளையும், உடைகளையும் கேட்டு வாங்க வேண்டும்; அவற்றை உங்கள் மகன்மாருக்கும் மகள்மாருக்கும் அணிவிக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்#3:22 கொள்ளையிடுவீர்கள் – நீங்கள் அவர்களிடம் கேட்பதையெல்லாம் அவர்கள் உங்களுக்குக் கொடுப்பார்கள்.” என்றார்.