யாத்திராகமம் 2
2
மோசேயின் பிறப்பு
1அந்நாட்களில், லேவி குடும்பத்தில் உள்ள ஒரு மனிதன் ஒரு லேவியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். 2அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவன் ஒரு அழகான குழந்தை என்பதைக் கண்ட அவள், அவனை மூன்று மாதங்களாக மறைத்து வைத்தாள். 3ஆனால் அதற்குமேலும் அவனை மறைத்து வைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் கூடையை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசி, குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதிக்கரை ஓரமாயுள்ள நாணல்களுக்கு இடையில் வைத்தாள். 4அத்தோடு குழந்தையின் அக்கா அவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அறியும்படி, தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
5அப்போது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள், அவளுடைய தோழியர்கள் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தார்கள். பார்வோனின் மகள் நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் பணிப்பெண்ணை அனுப்பினாள். 6அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தபடியால், அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டு, “இது எபிரேயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள்.
7அந்நேரத்தில் குழந்தையின் அக்கா பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்க, எபிரேயப் பெண்களில் ஒரு தாதியை நான் அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள்.
8அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அந்தப் பெண் உடனே போய் குழந்தையின் தாயை அழைத்து வந்தாள். 9பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையைக் கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் குழந்தையைக் கொண்டுபோய் பாலூட்டி வளர்த்தாள். 10குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் அழைத்துச் சென்றாள்; அவன் அவளுடைய மகனானான். “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு அவள், “மோசே” எனப் பெயர் சூட்டினாள்.
மோசே மீதியானுக்கு ஓடுதல்
11மோசே வளர்ந்த பின்னர் ஒருநாள், தன் சொந்த எபிரேய மக்கள் இருக்கும் இடத்துக்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலை செய்வதைப் பார்த்தார். தன் சொந்த மக்களுள் ஒருவனான ஒரு எபிரேயனை ஒரு எகிப்தியன் அடிப்பதை அவர் கண்டார். 12மோசே இங்கும் அங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் மறைத்து வைத்தார். 13மோசே மறுநாள் வெளியே போனபோது, எபிரேயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டார். அப்போது அவர் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனை ஏன் அடிக்கின்றாய்?” என்று கேட்டார்.
14அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை ஆட்சியாளனாகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியவர் யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொல்லப் பார்க்கின்றாயோ?” என்று கேட்டான். மோசே பயந்து, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று நினைத்தார்.
15பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பி ஓடி, மீதியானில் வாழ்வதற்காகப் போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தார். 16மீதியானின் மதகுருவுக்கு ஏழு மகள்மார் இருந்தனர்; அவர்கள் தங்கள் தந்தையின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக, தண்ணீர் அள்ளி தொட்டிகளை நிரப்புவதற்கு அங்கே வந்தார்கள். 17அப்போது சில ஆட்டு மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். அதைக் கண்ட மோசே எழுந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் கொடுத்தார்.
18அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுயேலிடம் திரும்பி வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு முன்னதாகவே வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான்.
19அதற்கு அவர்கள், “எகிப்தியனொருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றி, எங்களுக்கும் எங்கள் மந்தைக்கும் தண்ணீர் அள்ளிக் கொடுத்தான்” என்றார்கள்.
20அப்போது அவன் தன் மகள்மாரிடம், “அவன் எங்கே? அவனை அழைத்து வராதது ஏன்? அவனுக்கு ஏதாவது உண்ணக்கொடுப்பதற்கு அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான்.
21அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட#2:21 அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தார்; அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து கொடுத்தான். 22சிப்போராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது மோசே, “நான் பிறநாட்டில் அந்நியனாய் இருக்கின்றேன்” என்று சொல்லி அவனுக்குக் கெர்சோம்#2:22 கெர்சோம் – அங்கே பிறநாட்டவன் எனப் பெயர் சூட்டினார்.
23அந்த நீண்ட காலப்பகுதிக்குள் எகிப்திய அரசன் இறந்தான்; இஸ்ரயேலர் தங்கள் அடிமைத்தனத்தின் வேதனையில் உதவி கேட்டு கதறினார்கள், அவர்களது அடிமைத்தனத்தின் அழுகுரல் இறைவனை எட்டியது. 24இறைவன் அவர்களுடைய கதறுதலைக் கேட்டு, ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். 25எனவே இறைவன் இஸ்ரயேலரின் பரிதாப நிலையைப் கண்டு, அவர்களைக் குறித்து கரிசனைகொண்டார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 2: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.