YouVersion Logo
Search Icon

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்Sample

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

DAY 1 OF 30

இது கதை நேரம்!

கதைகள் எனக்கு எப்போதும் பிடிக்கும் - அது உண்மை கதையாக இருந்தாலும் சரி, புனைகதையாக இருந்தாலும் சரி, நடந்த சம்பவமாக இருந்தாலும் சரி, கற்பனை கதையாக இருந்தாலும் சரி, கதைகள் எனக்குப் பிடிக்கும். கதைகள் நம் நினைவுகளில் தங்கி, நமக்குத் தேவையான நேரத்தில் மீண்டும் ஞாபகத்துக்கு வரும் ஒரு விசேஷித்த தன்மையைக் கொண்டுள்ளன.

இன்னும் விரிவாகக் கூற வேண்டுமானால், கதைகள் கற்பித்தலுக்கு உதவும் வல்லமை வாய்ந்த கருவிகளாகும். ஒரு கொள்கையை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு அல்லது ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதற்கு, அது கதை வடிவில் சொல்லப்படும்போது, நாம் அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள ​​அதிக வாய்ப்பு உள்ளது.

இயேசு இதை நன்றாகப் புரிந்துவைத்திருந்தார், அதனால்தான் அவர் பெரும்பாலும் கதைகளைப் பயன்படுத்திக் கற்பித்தார். அவை உவமைகள் என்று அழைக்கப்படுகின்றன, மற்றும் நற்செய்தி புத்தகங்களில் 40க்கும் மேற்பட்ட உவமைகளை நாம் காணலாம்.

அடுத்த நான்கு வாரங்களில், லூக்கா 10:25-37 (TAOVBSI) வரையுள்ள வசனங்களில் காணப்படும் நல்ல சமாரியன் கதையிலிருந்து ஆரம்பித்து, இயேசு கூறிய மிகவும் பிரபலமான நான்கு உவமைகளை ஆராய்ந்து பார்ப்போம்.

இந்த உவமையில், எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம் செய்யும்போது, ஒரு மனிதன் கள்ளர்களால் தாக்கப்படுகிறான். அவன் கொள்ளையடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, ஆடைகள் கழற்றப்பட்டு, குற்றுயிராய் கிடந்தபோது, ​​மூன்று பேர் அவ்வழியே கடந்து சென்றனர்: ஒருவன் ஆசாரியன், இன்னொருவன் லேவியன் மற்றொருவன் சமாரியன். இயேசுவோடு கூட இருந்த யூதர்கள், முதலில் கடந்து சென்ற இருவரையும் பரிசுத்தவான்களாகவும் தெய்வீக மனிதர்களாகவும் கருதியிருந்தனர், ஆனாலும் அவர்கள் பாதிக்கப்பட்ட நபரைப் பார்த்தபோது, அங்கே நின்று அவனுக்கு உதவவில்லை. மூன்றாவதாக வந்த நபரான சமாரியன், ஒரு புறக்கணிக்கப்பட்ட நபராக கருதப்பட்டான், ஆனால் அவன் நின்று, அந்த மனிதனுக்கு உதவினான்.

வேதாகம கதையை விளக்கமாகப் புரிந்துகொள்ளும்படி, அதை ஆராய்ந்து பார்க்கத் தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழி, கேள்வி கேட்டல்: இதில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? என்னை அடையாளப்படுத்த மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர்:

  1. பாதிக்கப்பட்டவர் - நீங்கள் அடிக்கப்பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ உணர்கிறீர்களா? அந்த உணர்வுகளை ஆண்டவரிடம் கொண்டுசெல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் உதவிக்காக நீங்கள் அருகில் செல்லக்கூடிய நல்ல சமாரியர்கள் இருக்கிறார்களா?
  2. ஆசாரியன் மற்றும் லேவியன் - நான் "மிகவும் நல்ல கிறிஸ்தவர்" என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் வேதாகமத்தை நன்றாகப் படித்து, தவறாமல் ஜெபிக்கிறவர்களாகவும், பல ஆண்டுகளாகத் திருச்சபைக்குச் சென்று வருகிறவர்களாவும் இருக்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்கு சிறப்பாக அமைந்த வாழ்க்கையில் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே மூழ்கிப்போயிருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள தேவைகளுக்கு உங்கள் கண்களைத் திறக்கும்படி ஆண்டவரிடம் கேளுங்கள்.
  3. சமாரியன் - நீங்கள் ஒதுக்கப்பட்ட ஒரு நபராக உணர்கிறீர்களா? தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டீர்களா? உங்களுக்கு மோசமான காரியங்கள் நடக்க வேண்டும் என்று உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் எதிர்பார்க்கிறார்களா அல்லது உங்களை முற்றிலுமாகத் தவிர்த்து, அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வதுபோல் தோன்றுகிறதா? ஆண்டவர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்! அவர் உங்கள் இதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கிறார். உங்களுக்கு உதவி செய்யும்படி, ஏற்ற நேரத்தில் உங்களுக்கு அருகில் வருவார்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Jenny Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

Scripture

About this Plan

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More