யாத் 39
39
அத்தியாயம் 39
ஆசாரிய உடைகள் செய்யப்பட்டது யாத். 28:1-14.
1யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
ஏபோத் செய்யப்பட்டது
2ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 3அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பர நூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள். 4இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 5அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
6இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள். 7யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களைக் குறித்து ஞாபகக்குறிக் கற்களாக இருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
மார்ப்பதக்கம் செய்யப்பட்டது. யாத். 38:1-7
8மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 9அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி, 10அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 11இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், 12மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 13நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. 14இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது. 15மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து, 16இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து, 17பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி, 18பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள். 19பின்னும் இரண்டு வளையங்களைச்செய்து, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்பக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து, 20வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து, 21மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.
மற்ற ஆசாரிய உடைகள் செய்யப்பட்டது.
யாத். 28:31-43.
22ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான். 23அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது. 24அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து, 25சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள். 26யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.
27ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும், 28மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும், 29திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடுப்புக்கச்சையையும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.
30பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி, 31அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
மோசே ஆசரிப்புக்கூடாரத்தைப் பார்வையிடுதல். யாத். 35:10-19.
32இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
33பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 34சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லிய தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும், 35சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், 36மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும், 37சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், 38பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும், 39வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 40பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும், 41பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும் கொண்டுவந்தார்கள். 42யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள். 43மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Voafantina amin'izao fotoana izao:
யாத் 39: IRVTam
Asongadina
Dika mitovy
Mampitaha
Hizara
Tianao hovoatahiry amin'ireo fitaovana ampiasainao rehetra ve ireo nasongadina? Hisoratra na Hiditra
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.