Akara Njirimara YouVersion
Akara Eji Eme Ọchịchọ

எண் 5

5
அத்தியாயம் 5
முகாமை சுத்திகரித்தல்
1யெகோவா மோசேயை நோக்கி: 2“குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு. 3ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார். 4யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.
தவறுகளுக்கான தண்டனை
5மேலும் யெகோவா மோசேயை நோக்கி: 6“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், 7அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும். 8அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். 9இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும். 10ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
உண்மையில்லாத மனைவிக்கான சோதனை
11யெகோவா மோசேயை நோக்கி: 12“நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து, 13ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், 14எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும், 15அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும். 16“ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, 17ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு, 18பெண்ணைக் யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, அவளுடைய முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவளுடைய உள்ளங்கையிலே வைக்கவேண்டும்; சாபகாரணமான கசப்பான தண்ணீர் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். 19பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய். 20உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால், 21யெகோவா உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து#5:21 நீ மலடியாவாய்., உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக. 22சாபகாரணமான இந்த தண்ணீர் உன்னுடைய வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் செய்யும்படி, உன்னுடைய குடலுக்குள் போகவேண்டும் என்கிற சாபவார்த்தையாலே பெண்ணை ஆணையிடவைத்துச் சொல்வானாக. அதற்கு அந்தப் பெண்: ஆமென், ஆமென், என்று சொல்லவேண்டும். 23“பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான தண்ணீரால் கழுவிப்போட்டு, 24சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். 25பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, 26ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும். 27அந்த தண்ணீரைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன்னுடைய கணவனுக்குத் துரோகம்செய்திருந்தால், சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் நுழைந்து கசப்புண்டானதால், அவளுடைய வயிறு வீங்கி, அவளுடைய இடுப்பு சூம்பும்; இப்படியே அந்தப் பெண் தன்னுடைய மக்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். 28அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள். 29“ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும், 30கணவன்மேல் எரிச்சலின்#5:30 சந்தேகத்தின் ஆவி ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் யெகோவாவுடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும். 31கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல்” என்றார்.

Nke Ahọpụtara Ugbu A:

எண் 5: IRVTam

Mee ka ọ bụrụ isi

Kesaa

Lee anya n'etiti ihe abụọ

Mapịa

None

Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye