எண் 21
21
அத்தியாயம் 21
ஆராத் அழிக்கப்படுதல்
1வேவுகாரர்கள் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்கள் வருகிறார்கள் என்று தெற்கே வாழ்கிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலர்களுக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். 2அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் அழிப்போம்” என்று சபதம் செய்தார்கள். 3யெகோவா இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா#21:3 அழிவு என்று பெயரிட்டார்கள்.
வெண்கல பாம்பு
4அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள். 5மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள். 6அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள். 7அதினால் மக்கள் மோசேயினிடத்தில் போய்: “நாங்கள் யெகோவாவுக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம்செய்தோம்; பாம்புகள் எங்களைவிட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும்” என்றார்கள்; மோசே மக்களுக்காக விண்ணப்பம்செய்தான். 8அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். 9அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
மோவாபுக்கு பயணம்
10இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள். 11ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள். 12அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், சேரேத் பள்ளத்தாக்கிலே முகாமிட்டார்கள். 13அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை. 14அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும், 15ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 16அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். 17அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். 18நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள். 19அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், 20பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
சீகோனையும் ஓகையும் தோற்கடித்தல்
21அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி: 22“உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி உத்திரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சைத்தோட்டங்களிலும் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், உமது எல்லையைக் கடந்துபோகும்வரை ராஜபாதையில் நடந்துபோவோம்” என்று சொல்லச்சொன்னார்கள். 23சீகோன் தன்னுடைய எல்லை வழியாகக் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்திரவு கொடாமல், தன்னுடைய மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்திரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான். 24இஸ்ரவேலர்கள் அவனைப் பட்டயக்கூர்மையினால் வெட்டி, அர்னோன் துவங்கி அம்மோன் மக்களின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்கும் உள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் மக்களின் எல்லை பாதுகாப்பானதாக இருந்தது. 25இஸ்ரவேலர்கள் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியர்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். 26எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான். 27அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும். 28எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது. 29ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான். 30அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம், தீபோன் ஊர்வரைக்கும் அழிந்தது#21:30 கல்லெறிந்து கொன்றார்கள்; மெதெபாவுக்கு அருகான நோப்பா பட்டணம்வரை அவர்களைப் பாழாக்கினோம்” என்று பாடினார்கள். 31இஸ்ரவேலர்கள் இப்படியே எமோரியர்களின் தேசத்திலே குடியிருந்தார்கள். 32பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள். 33பின்பு பாசானுக்குப் போகிற வழியாகத் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன்னுடைய எல்லா மக்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எத்ரேயிக்குப் புறப்பட்டு வந்தான். 34யெகோவா மோசேயை நோக்கி: “அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும், அவனுடைய தேசத்தையும் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார். 35அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாக இல்லாதபடி அவனையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய எல்லா மக்களையும் வெட்டிப்போட்டு, அவனுடைய தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.
Nke Ahọpụtara Ugbu A:
எண் 21: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.