லேவி 25
25
அத்தியாயம் 25
ஓய்வுநாள்
1யெகோவா சீனாய்மலையில் மோசேயை நோக்கி: 2“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, தேசம் யெகோவாவுக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். 3ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக. 4ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும், 5தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக. 6தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; உன்னுடைய வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும், 7உன் நாட்டு மிருகத்திற்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்திற்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாக இருப்பதாக.
யூபிலி வருடம்
8“மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும். 9அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும். 10“50 வது வருடத்தைப்#25:10 50 வது வருடம் மீட்பின்/ விடுதலையின் வருடம், பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். 11அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. 12அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும். 13“அந்த யூபிலி வருடத்தில் உங்களில் அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போகக்கடவன். 14ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. 15யூபிலி வருடத்திற்குப் பின்வரும் வருடங்களின் எண்ணிக்கைக்கேற்ப பிறனிடத்தில் வாங்குவாயாக; பலனுள்ள வருடங்களின் தொகைக்கேற்ப அவன் உனக்கு விற்பானாக. 16பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும். 17உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. 18“என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள். 19பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள். 20ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், 21நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும். 22நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து, ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
நிலங்களை மீட்டெடுத்தல்
23“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள். 24உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். 25“உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். 26அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், 27அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன். 28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான். 29“ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். 30ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது. 31மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும். 32லேவியர்களின் சொந்த இடமாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர்கள் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். 33இஸ்ரவேல் மக்களுக்குள்ளே லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய சொந்தமாக இருப்பதால், லேவியர்களிடத்தில் அவனுடைய சொந்தமான பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு, யூபிலி வருடத்தில் விடுதலையாகும். 34அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படக்கூடாது; அது அவர்களுக்கு நிரந்தர சொந்தமாக இருக்கும். 35“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக. 36நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக. 37அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தை லாபத்திற்கும் கொடுக்காதே. 38உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே. 39“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம். 40அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும். 41பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன். 42அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது. 43நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு. 44உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம். 45உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம். 46அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது. 47“உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால், 48அவன் விற்கப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவனுடைய சகோதரர்களில் ஒருவன் அவனை மீட்கலாம். 49அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். 50அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். 51இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன். 52யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும். 53இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது. 54இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள். 55இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Nke Ahọpụtara Ugbu A:
லேவி 25: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.