யாத் 28
28
அத்தியாயம் 28
ஆசாரிய உடை.
யாத் 39:1-7
1“உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள். 2உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு. 3ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு. 4அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புக்கச்சையுமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும். 5அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும்.
ஏபோத்து
6“ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும். 7அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். 8அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். 9பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக. 10அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும். 11இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. 12ஆரோன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும். 13“பொன்னினால் வளையங்களைச்செய்து, 14சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
மார்ப்பதக்கம், யாத்திராகமம். 39:8-21.
15“நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. 16அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும். 17அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களை நிறையப் பதிக்கவும்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 18இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும், 19மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 20நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். 21இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும். 22மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து, 23அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து, 24பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி, 25அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும். 26நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து, 27வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து, 28மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும். 29ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைத் தன்னுடைய இருதயத்தின்மேல் இருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும். 30நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம்#28:30 தேவனுடைய சித்தத்தை அறிந்துக் கொள்ள இந்த ஊரீம் தும்மீம் உபயோகப்படுத்தப்பட்டது என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
மற்ற ஆசாரிய உடைகள், (யாத்திராகமம் 39:22-31).
31“ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும். 32தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்திற்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். 33அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும். 34அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமுமாகத் தொங்கட்டும். 35ஆரோன் ஆராதனை செய்யக் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
36“சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, 37அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக. 38இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; யெகோவாவுடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும். 39“மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும். 40“ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும். 41உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனுடன் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 42அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும். 43ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.
Nke Ahọpụtara Ugbu A:
யாத் 28: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.