யாத் 18
18
அத்தியாயம் 18
எத்திரோ மோசேயை சந்தித்தல்
1தேவன் மோசேக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கும் செய்த யாவையும், யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததையும், மீதியானில் ஆசாரியனாக இருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது, 2மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும், 3அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்” என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம்#18:3 பரதேசி என்று பெயரிட்டிருந்தான். 4“என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர்#18:4 என் தேவன் எனக்கு துணையாக இருக்கிறார் என்று பெயரிட்டிருந்தான். 5மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து: 6“எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம்” என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான். 7அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். 8பின்பு மோசே யெகோவா இஸ்ரவேலுக்காக பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு சம்பவித்த எல்லா வருத்தத்தையும், யெகோவா தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன்னுடைய மாமனுக்கு விவரித்துச் சொன்னான். 9யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு: 10“உங்களை எகிப்தியர்களின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியர்களுடைய கையின் கீழ் இருந்த மக்களை விடுவித்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம். 11யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி; 12மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர்கள் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் சாப்பிட்டார்கள்.
நியாயதிபதிகள் நியமிக்கபட்டார்கள் (உபாகமம் 1:1-18)
13மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள். 14மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: “நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன்” என்றான். 15அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள். 16அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான். 17அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; 18நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது. 19இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்; 20கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். 21மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும். 22அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும். 23இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான். 24மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். 25மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான். 26அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள். 27பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.
Nke Ahọpụtara Ugbu A:
யாத் 18: IRVTam
Mee ka ọ bụrụ isi
Kesaa
Lee anya n'etiti ihe abụọ
Mapịa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.