உபா 7
7
அத்தியாயம் 7
மக்களைத் துரத்திவிடுதல்
1“நீ சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்து, உன்னைவிட எண்ணிக்கையிலும் பெலத்திலும் மிகுந்த மக்களாகிய ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் ஏழு பலத்த தேசங்களை உனக்கு முன்பாகத் துரத்தி, 2உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களைத் தாக்கி, முற்றிலும் அழித்துவிடவேண்டும்; அவர்களுடன் உடன்படிக்கைசெய்யவும் அவர்களுக்கு மனமிரங்கவும் வேண்டாம். 3அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. 4என்னைப் பின்பற்றாமல், அந்நிய தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் உன்னுடைய மகன்களை விலகச்செய்வார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். 5நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும். 6நீ உன் தேவனாகிய யெகோவா வுக்குப் பரிசுத்த மக்கள், பூமியிலுள்ள எல்லா மக்களிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னைத் தமக்குச் சொந்தமாயிருப்பதற்காகத் தெரிந்துகொண்டார். 7சகல மக்களிலும் நீங்கள் எண்ணிக்கையில் அதிகமான மக்களென்று யெகோவா உங்கள்மேல் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் எல்லா மக்களிலும் சிறிய கூட்டமாயிருந்தீர்கள். 8யெகோவா உங்களில் அன்புசெலுத்தியதாலும், உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்பதினாலும்; யெகோவா பலத்த கையினால் உங்களைப் புறப்படச்செய்து, அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்தும், அதின் ராஜாவான பார்வோனின் கையிலிருந்தும் உங்களை மீட்டுக்கொண்டார். 9ஆகையால் உன் தேவனாகிய யெகோவாவே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், 10தம்மைப் பகைக்கிறவர்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் வெளிப்படையாகப் பதிலளிப்பார் என்றும் நீ அறிவாயாக. 11ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்வாயாக. 12“இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து, 13உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்து, கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகச்செய்து, உன் கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின் பலன்களாகிய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். 14சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருப்பதில்லை. 15யெகோவா சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியர்களின் கொடிய வியாதிகளில் ஒன்றும் உன்மேல் வரச்செய்யாமல், உன்னைப் பகைக்கிற அனைவரின்மேலும் அவைகளை வரச்செய்வார். 16உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல மக்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரக்கம்காட்டாமல் இருப்பதாக; அவர்கள் தெய்வங்களை நீ வழிபடாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாக இருக்கும். 17“அந்த மக்கள்கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால், 18உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும், 19உன்னுடைய கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவனாகிய யெகோவா உன்னைப் புறப்படச்செய்து காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாக நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ யாரைப்பார்த்துப் பயப்படுகிறாயோ அவர்களுக்கும் உன் தேவனாகிய யெகோவா அப்படியே செய்வார். 20மீதியாயிருந்து உன் கண்களுக்குத்தப்பி ஒளிந்துகொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரை உன் தேவனாகிய யெகோவா அவர்களுக்குள்ளே குளவிகளை#7:20 கொள்ளைநோய் அனுப்புவார். 21அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். 22அந்த மக்களை உன் தேவனாகிய யெகோவா கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும். 23உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியும்வரை அவர்களை மிகவும் கலங்கடிப்பார். 24அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர் வானத்தின்கீழ் இராதபடி அவர்களை அழிக்கக்கடவாய்; நீ அவர்களை அழித்துமுடியும்வரை ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள். 25அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடி, அவைகளில் இருக்கிற வெள்ளியையும், பொன்னையும் ஆசைப்படாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். 26அவைகளைப்போல நீ சாபத்திற்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிற்குக் கொண்டுபோகாதே; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருப்பாயாக, அது சாபத்திற்குள்ளானது.
Nke Ahọpụtara Ugbu A:
உபா 7: IRVTam
Mee ka ọ bụrụ isi
Mapịa
Lee anya n'etiti ihe abụọ
Kesaa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.