உபா 11
11
அத்தியாயம் 11
தேவனுக்குக் கீழ்ப்படிதல்
1“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக. 2உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சிட்சிகளையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும், 3அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய செயல்களையும், 4எகிப்திய படையும் அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்போது, யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை அவர்கள்மேல் புரளச்செய்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செயலையும், 5நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர் உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும், 6ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். 7யெகோவா செய்த மகத்துவமான செயல்களையெல்லாம் உங்களுடைய கண்கள் அல்லவோ கண்டது. 8“ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும், 9நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திற்குள் நுழைந்து அதைச் சொந்தமாக்குவதற்கும், யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழ்வதற்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. 10நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். 11நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்; 12அது உன் தேவனாகிய யெகோவா விசாரிக்கிற தேசம், வருடத்தின் துவக்கமுதல் வருடத்தின் முடிவுவரை எப்பொழுதும் உன் தேவனாகிய யெகோவாவின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். 13“நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி, அவரைப் பணிந்துகொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், 14நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து, 15மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படிச் செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார். 16உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள். 17இல்லாவிட்டால் யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். 18ஆகையால் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்த தேசத்தில் உங்களுடைய நாட்களும், உங்களுடைய பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும்வரை நீடித்திருப்பதற்கு, 19நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, 20அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. 21அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக. 22நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால், 23யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள். 24உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும். 25ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார். 26“இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். 27இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், 28எங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். 29நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும். 30அவைகள் யோர்தான் அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது? 31உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். 32ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.
Nke Ahọpụtara Ugbu A:
உபா 11: IRVTam
Mee ka ọ bụrụ isi
Mapịa
Lee anya n'etiti ihe abụọ
Kesaa
Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.