எரே 39
39
அத்தியாயம் 39
எருசலேமின் வீழ்ச்சி
1யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள். 2சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது. 3அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள். 4அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் எல்லாப் போர் வீர்களும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இரவு நேரத்தில் ராஜாவின் தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான். 5ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான். 6பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவில், சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டவைத்தான்; யூதாவின் பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, 7சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான். 8கல்தேயர், ராஜாவின் அரண்மனையையும் மக்களின் வீடுகளையும் நெருப்பால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். 9நகரத்தில் தங்கியிருந்த மக்களையும், தன்னிடத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற மக்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான். 10காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான். 11ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி: 12நீ அவனை வரவழைத்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாகப் பார்த்து, அவன் உன்னுடன் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளைகொடுத்தான். 13அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும், 14எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவதற்கு அவனைச் சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் மக்களுக்குள்ளே தங்கியிருந்தான். 15இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவனுக்குக் யெகோவாவால் உண்டான வசனம்: 16நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரச்செய்வேன்; அவைகள் அந்நாளில் உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 17ஆனால் அந்நாளில் உன்னைத் தப்புவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனிதரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. 18உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்திற்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பி இருக்கிறதினால் உன் உயிர் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
دیاریکراوەکانی ئێستا:
எரே 39: IRVTam
بەرچاوکردن
لەبەرگرتنەوە
بەراوردکردن
هاوبەشی بکە
دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.