Bible App logo
ئایکۆنی گەڕان

ஏசா 19

19
அத்தியாயம் 19
எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம்
1எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும். 2சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன். 3அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள். 4நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார். 5அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும். 6ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும். 7நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற இலையுள்ள செடிகளும், நதியருகில் விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாமல்போகும். 8மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற அனைவரும் துக்கப்படுவார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள். 9மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், மெல்லிய ஆடைகளை நெய்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். 10மீன் வளர்க்கிற குளங்களுக்கு கூலிக்கு அணை கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும். 11சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்? 12அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும். 13சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பு பட்டணத்தின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பச்செய்கிறார்கள். 14யெகோவா அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரச்செய்தார்; குடிவெறியன் வாந்தியெடுத்து, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியச்செய்கிறார்கள். 15எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது. 16அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள். 17சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாக தீர்மானித்துக்கொண்ட ஆலோசனையினால் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் அதிர்ச்சியடைவான். 18அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, சேனைகளின் யெகோவாவை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று அழிக்கப்பட்ட பட்டணம் என்னப்படும். 19அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே யெகோவாவுக்கு ஒரு தூணும் உண்டாயிருக்கும். 20அது எகிப்துதேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினால் அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார். 21அப்பொழுது யெகோவா எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர்கள் யெகோவாவை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும், காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து அவைகளைச் செலுத்துவார்கள். 22யெகோவா எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார். 23அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர்கள் எகிப்திற்கும், எகிப்தியர்கள் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர்கள் அசீரியருடன் ஆராதனை செய்வார்கள். 24அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். 25அவர்களைக்குறித்துச் சேனைகளின் யெகோவா: எகிப்தியராகிய என் மக்களும், அசீரியராகிய என் கரத்தின் செயலும், இஸ்ரவேலராகிய என் சொத்தும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

دیاریکراوەکانی ئێستا:

ஏசா 19: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە