எசேக் 10
10
அத்தியாயம் 10
மகிமை ஆலயத்திலிருந்து புறப்படுதல்
1இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனத்தைபோல ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது. 2அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே நுழைந்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற நெருப்புத்தழலில் உன்னுடைய கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் சிதறலாக வீசு என்றார்; அப்படியே அவன் என்னுடைய கண்காண உள்ளே நுழைந்தான். 3அந்த மனிதன் உள்ளே நுழையும்போது, கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உள்முற்றத்தை நிரப்பிற்று. 4யெகோவாவுடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, முற்றமும் யெகோவாவுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று. 5கேருபீன்களுடைய இறக்கைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசும்போது உண்டாகும் சத்தம்போல வெளிமுற்றம்வரை கேட்கப்பட்டது. 6அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான். 7அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன்னுடைய கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற நெருப்பில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். 8கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழ் மனிதர்களின் கையைப் போல காணப்பட்டது. 9இதோ, கேருபீன்கள் அருகில் நான்கு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அருகில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை நிறம்போலிருந்தது. 10அவைகள் நான்கிற்கும் ஒரே மாதிரியான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருப்பதுபோல் காணப்பட்டது. 11அவைகள் ஓடும்போது தங்கள் நான்கு பக்கங்களிலும் ஓடும்; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை; தலைப்பார்க்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை. 12அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன. 13அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன். 14ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன்முகமும், இரண்டாம் முகம் மனிதமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நான்காம்முகம் கழுகுமுகமுமாக இருந்தது. 15கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியின் அருகில் கண்ட உயிர். 16கேருபீன்கள் செல்லும்போது சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை. 17அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் எழும்பும்போது இவைகளும் எழும்பின; உயிருள்ள ஆவி இவைகளில் இருந்தது. 18யெகோவாவுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது. 19அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து, என்னுடைய கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படும்போது சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாகச் சென்றன; யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. 20இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன். 21அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகமும், நான்கு இறக்கைகளும் இருந்தன; அவைகளுடைய இறக்கைகளின்கீழ் மனித கைளைப் போல இருந்தது. 22அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.
دیاریکراوەکانی ئێستا:
எசேக் 10: IRVTam
بەرچاوکردن
لەبەرگرتنەوە
بەراوردکردن
هاوبەشی بکە
دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.