நியா 12
12
அத்தியாயம் 12
யெப்தாவும் எப்பிராயீமும்
1எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். 2அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை. 3நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான். 4பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள். 5கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், 6நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள். 7யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய இப்சான்
8அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 9அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான். 10பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய ஏலோன்
11அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 12பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய அப்தோன்
13அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 14அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான். 15பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.
S'ha seleccionat:
நியா 12: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.